ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. காவல் துறையில் பணியாற்றும் யு.மாணிக்கவேல் என்பவர் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்து, காவலர் குடியிருப்பில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்யும்படி 2014-ம் ஆண்டு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘உயர் அதிகாரிகள் தங்கள் கீழ் உள்ளவர்களை கட்டுப்படுத்த இயலாவிட்டால், நன்மதிப்பை இழக்க நேரிடும் என்று தெரிவித்ததோடு, உயர் அதிகாரிகளின் வீடுகளில் ஆர்டர்லி, வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர், சொந்த வாகனங்களில் அரசு முத்திரை போன்ற விவகாரங்கள் குறித்தும் விசாரித்து வருகிறார்.இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, ஆர்டர்லிகளை வைத்திருக்கக் கூடாது என்கிற தமிழக உள்துறை முதன்மைச் செயலாளாரின் உத்தரவை செயல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்டர்லி விவகாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறி தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி, காவல்துறை பணியை குறைத்து மதிப்பிடவில்லை. ஒரு சில அதிகாரிகள் மட்டுமே தனிப்பட்ட முறையில் உள்ள நல்லெண்ணம் காரணமாக ஆர்டர்லிகளை பயன்படுத்துவது இல்லை.அனைவருக்கும் ஓர் உதவியாளர் தேவை. ஆனால் மக்களின் வரிப் பணம் வீணடிக்கப்படுவது கவலை அளிக்கிறது என அதிருப்தி தெரிவித்தார். ஆர்டர்லிகளும் தங்களுக்கு வேறு ஆதாயம் கிடைக்கும் என்பதால், இதுகுறித்து புகார் சொல்வது இல்லை. பொதுமக்கள் பணம் வீணடிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகாரளித்தாலும் அமுக்கப்படுகின்றனர் அல்லது சுடப்படுகின்றனர் என வேதனை தெரிவித்தார்.அப்போது அரசு தரப்பில் ஆர்டர்லி ஒழிப்பு குறித்து நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிப்பது உதவியாக உள்ளது. காவல்துறையினர் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரும்பாலான ஆர்டர்லிகள் திரும்ப பெறப்பட்டுள்ளனர். மாற்று ஏற்பாடு செய்தவுடன் மற்றவர்களும் திரும்பப் பெறப்படுவார்கள். ஒரு காவல் உயர் அதிகாரி வீட்டில் 5 காவலர்கள் பணியமர்த்தப்பட்டால் மாதம் ஒன்றுக்கு இரண்டரை லட்ச ரூபாயை அரசு செலவிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, காவல் துறை பணி தவிர தனிப்பட்ட பணிகளுக்காக ஆர்டர்லியை பயன்படுத்த மாட்டோம் என அனைத்து ஐபிஎஸ் அதிகாரிகளும் உத்தரவாதம் அளித்துள்ளனர். இதனை டிஜிபி தனது அறிக்கையில் குறிப்பிட்டு அனைத்து அதிகாரிகள் சார்பாக டிஜிபி உத்தரவாதம் அளித்துள்ளார். மேலும், டிஜிபி எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது என்றும், பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்தார். குறிப்பாக பயிற்சி பெற்ற காவலர்கள் ஆர்டர்லிகளாக பயன்படுத்த்ப்படக் கூடாது. உயர் அதிகாரிகளுக்கு தேவைப்பட்டால் இருப்பிட உதவியாளர்களை நியமிக்கலாம். காவல்துறையில் உள்ள வாகனங்களையும், தவறாக பயன்படுத்தபடக் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளார். ஆர்டர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக அரசு டிஜிபி-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. …

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை