கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செக்குமேடு அருகே அமைக்கப்பட இருந்த தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடைக்கு சரக்குகளை கொண்டு வந்த லாரி கண்ணாடியை உடைத்து பெத்திக்குப்பம் பகுதியை சேர்ந்த டாஸ்மாக் ஊழியர் சீனிவாசன்(42) என்பவரை தாக்கிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் செக்குமேடு அருகே ஒதுக்குபுறமான இடத்தில் தமிழக அரசின் டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட உள்ளது. இந்த டாஸ்மாக் கடையை திறப்பதற்காக வியாழக்கிழமை மாலை டாஸ்மாக் குடோனில் இருந்து லாரியில் மதுபாட்டில்கள் கொண்டு வரப்பட்டு கடையில் இறக்க வந்தபோது டாஸ்மாக் கடை அருகே வந்த சிலர் டாஸ்மாக் ஊழியர் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தகாத வார்த்தையால் திட்டினர். தொடர்ந்து அவர்கள் டாஸ்மாக் ஊழியர் சீனிவாசனை தாக்கி மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரியின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். இதை கண்ட சீனிவாசன் அங்கிருந்து தப்பியோடி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் ஆரம்பாக்கம் போலீசார் விசாரணையில் டாஸ்மாக் ஊழியர் சீனிவாசனை தாக்கி டாஸ்மாக் வாகனத்தை சேதப்படுத்தியது ஆரம்பாக்கம் அருகே ஆந்திர பகுதியான காரூரை சேர்ந்த முனுசாமி(36), விநாயகம்(61),முனுசாமி(62), கலாநிதி(40), இளையாபதி(35) என தெரியவந்தது. மேற்கண்ட 5 நபர்களுக்கும் டாஸ்மாக் கடையை நடத்த இடம் தந்த நபருக்கும் முன் விரோதம் இருந்தது. கலாநிதிக்கு சொந்தமான இடத்தில் டாஸ்மாக் கடையை நடத்த அவர் விருப்பம் தெரிவித்த நிலையில் ,அந்த இடத்தில் டாஸ்மாக் கடையை நடத்தாமல் அவரது முன்விரோதியின் இடத்தில் டாஸ்மாக் கடை துவக்க இருந்ததால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக டாஸ்மாக் அதிகாரிகளிடம் போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து இதுதொடர்பாக ஆரம்பாக்கம் போலீசார் மேற்கண்ட 5 நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். …