தஞ்சாவூர், ஜூன் 25: தஞ்சாவூரில் வழிப்பறியில் ஈடுபட திட்டம் தீட்டிய 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தஞ்சாவூர் வடக்குவாசல் ராஜாகோரி சுடுகாடு பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் சுற்றித் திரிவதாக நேற்று முன்தினம் தஞ்சாவூர் மேற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் தலைமையிலான போலீசார் அங்கு சென்று கண்காணிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் கத்தி மற்றும் அரிவாள் போன்ற ஆயுதங்களை பதுக்கி வைத்திருந்ததும், அந்த பகுதி வழியாக வரும் பொதுமக்களை கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறியில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
மேலும் அவர்கள், தஞ்சை களிமேடு பிருந்தாவனம் பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் பங்கஜ்குமார் (25), அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் மகன் முத்துகுமார் (32), வடக்குவாசல் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் ஹரிஹரன்(27), வடக்குவாசல் கங்காநகரை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சந்தோஷ் (24), அதே பகுதியை சேர்ந்த பிச்சமுத்து மகன் செல்வகுமார் (23) என்பதும், தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடம் இருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்த போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.