ஆம்பூர்: ஆம்பூர் அருகே இன்று அதிகாலை டயர் வெடித்ததில் தக்காளி ஏற்றிச்சென்ற மினி வேன் கவிழ்ந்தது. மாண்டஸ் புயல் ஓய்ந்த நிலையில் வட மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக அதிகாலையில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. மார்கழி மாத பிறப்பான இன்றும் அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவியது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் தேசிய நெடுஞ்சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருந்தது. இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி இன்று காலை தக்காளி லோடு ஏற்றிக்கொண்டு மினிவேன் சென்றது. ஆம்பூர் அடுத்த மாதனூர் மேம்பாலத்தில் சென்றபோது மினிவேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய வேன் கவிழ்ந்தது. சத்தம் கேட்ட அப்பகுதி மக்கள் விரைந்து சென்று வேனில் சிக்கிய டிரைவரை மீட்டனர். இதனால் டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் விரைந்து வந்து வேனை மீட்டனர். சிறிது நேரத்தில் போக்குவரத்தையும் சரிசெய்தனர்….