மதுரை, ஜூலை 20: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே, ஆம்னி பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு மாநகராட்சி சார்பில் 66 கடைகள் கட்டப்பட்டு, ஆம்னி பஸ் புக்கிங் அலுவலகமாக இயங்கி வருகிறது.
அவற்றில் 11 கடைகள் கடந்த 6 மாதம் முதல் 5 ஆண்டுகள் வரை மாநகராட்சிக்கு வாடகை செலுத்தாமல் இருக்கின்றன. இது குறித்து ஆய்வு நடத்திய கமிஷனர் தினேஷ்குமார், வாடகை செலுத்தாத கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். இதன்படி வரிவதிப்பு அதிகாரிகள், 11 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பி வாடகை செலுத்த உத்தரவிட்டனர். இதன்பிறகும் வாடகை செலுத்தாததால் மாநகராட்சி சார்பில் ரூ.19.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதையும் செலுத்த மறுத்த அலுவலகங்களை மாநராட்சி அதிகாரிகள் நேற்று பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.