கோவை, ஜன. 10: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், பலர் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து, ஆம்னி பஸ்களில் டிக்கெட் புக்கிங் வேகமாக நடந்து வருகிறது. பொதுவாக, பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்தல் போன்ற புகார்கள் வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில் ஆம்னி பஸ்களில் நிலையான கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்காமல் பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வராத வகையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் சிறைபிடிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் ஆம்னி பஸ்களின் முறையற்ற இயக்கம், கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட தங்களின் புகார்களை 93848-08304 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக புகார்தாரர் பெயர், தொலைபேசி எண், பயணம் செய்யும் தேதி, செல்லும் இடம், டிக்கெட்டின் புகைப்படம், கட்டண விவரம், பேருந்து எண் மற்றும் பெயர் உள்ளிட்ட விரவங்களுடன் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.