Saturday, September 28, 2024
Home » ஆம்ஆத்மி எம்எல்ஏ முதல் உ.பி சபாநாயகர் வரை… பாலியல் உள்நோக்க பேச்சால் கதறும் நடிகை: சமூக ஊடகங்களில் காரசார விவாதம்

ஆம்ஆத்மி எம்எல்ஏ முதல் உ.பி சபாநாயகர் வரை… பாலியல் உள்நோக்க பேச்சால் கதறும் நடிகை: சமூக ஊடகங்களில் காரசார விவாதம்

by kannappan

லக்னோ: ஆம்ஆத்மி எம்எல்ஏ முதல் உத்தரபிரதேச சபாநாயகர் வரை பலரும் நடிகை ராக்கி சாவந்த்தை பாலியல் உள்நோக்கத்துடன் பேசுவதாக புகார் எழுந்ததால், அந்த நடிகை கடும் கோபத்தில் உள்ளார். உத்தரபிரதேச சட்டமன்ற சபாநாயகர் நாராயண் தீட்சித், உன்னாவ் மாவட்டம் பங்கார்மா சட்டமன்றத் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘மகாத்மா காந்தி சொற்ப ஆடைகளை மட்டுமே அணிவார். ஒரு வேட்டியை மட்டும்  மடித்துக் கட்டுக்கொண்டு செல்வார். நாடு அவரை ‘பாபுஜி’ என்று அழைத்தது. இவ்வாறாக  யாராவது தங்கள் ஆடைகளை குறைத்துக் கொண்டதன் மூலம் பெரிய மனிதர்களாக ஆக  முடியும் என்றால், ராக்கி சாவந்த் கூட (மாடல், நடிகை) மகாத்மா காந்தியை விட பெரிய  மனிதராக உருவாகி இருப்பார். நண்பர்களே! எனது இந்த பேச்சை சரியான சூழலில் எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். என்னுடைய கருத்துப்படி, எந்தவொரு தலைப்பிலும் புத்தகத்தை எழுத முடியும். அப்படி புத்தகங்கள் எழுதியவர்கள் எல்லாம் அறிவுஜீவியாக மாறவில்லை. நானும் பல ஆண்டுகளாக குறைந்தபட்சம் 6,000 புத்தகங்களை படித்திருக்கிறேன். அப்படியெல்லாம் எந்த எழுத்தாளரும் பிரபலமடையவில்லை. குறிப்பிட்டு சிலரே மக்கள் முன் நிலைத்து நிற்கின்றனர்’ என்றார். சபாநாயகரின் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மகாத்மா காந்தியுடன் நடிகையை ஒப்பிட்டு பேசியதை சிலர் கண்டித்துள்ளனர். மேலும், ஆபாச கருத்தாக உள்ளதாகவும் விமர்சித்துள்ளனர். முன்னதாக, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை, ‘பஞ்சாப் அரசியலின் ராக்கி சாவந்த்’ என்று ஆம்ஆத்மி எம்எல்ஏ ராகவ் சதாவு ஒப்பிட்டு பேசினார். இதனால், ஆத்திரமடைந்த ராக்கி சாவந்த், ‘என்னையும், என் பெயரையும் தேவையின்றி எதற்காக இழுக்கின்றீர்? உங்களது அரசியல் சர்ச்சைகளில், என்னுடைய பெயரை எதற்காக பயன்படுத்துகின்றீர்?’ என்று பதிவிட்டிருந்தார். மேலும், ராக்கி சாவந்தின் கணவர் வெளியிட்ட வீடியோ பதிவில், ‘என் மனைவியின் பெயரை பயன்படுத்தினால், சட்ட சிக்கலை எதிர்கொள்வீர்கள். நீங்கள் உங்கள் பதவிக்கு தகுதியற்றவர். பாலியல் உள்நோக்கத்துடன் என் மனைவியின் பெயரைக் கெடுக்க முயற்சிக்கிறீர்கள்’ என்று கண்டனம் தெரிவித்துள்ளார்….

You may also like

Leave a Comment

two × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi