ஆனி திருமஞ்சன விழா ேகாலாகலம் அலங்கார ரூபத்தில் நடராஜர் அருள்பாலிப்பு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, ஜூன் 27: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கோலாகலமாக நடைபெற்றது. அதையொட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய சிவகாமசுந்தரி சமேத நடராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் ேகாயிலில் எழுந்தருளி உள்ள நடராஜருக்கு, ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்தசத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆனி திருமஞ்சனமும் சிறப்பு மிக்கது. மார்கழி திருவாதிரையில் அருேணாதயகால பூஜை, மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் நண்பகல் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் உகந்தது.

மேலும் ஆனி மாதம், உத்திர நட்சத்திரத்தன்று, சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் ஆனி திருமஞ்சனத்தன்று நிகழ்த்தப்படும். அதன்படி, திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா நேற்று காலை கோலாகலமாக நடந்தது. அதையொட்டி, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்மையும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 5 மணியளவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரமும், அபிஷேகமும், 16 வகையான தீபங்களால் தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர், காலை 10 மணியளவில் அலங்கார ரூபத்தில் சுவாமியும், அம்மனும் 5ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர், திருமஞ்சன கோபுரத்தை அடுத்த கட்டை கோபுரம் வழியாக கோயிலுக்குள் சென்று மகிழமரம் முன்பு சுவாமியும், அம்மனும் எதிரெதிர் நின்று பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தர்கள் பக்திப்பெருக்குடன் வழிபட்டனர். அதைத்தொடர்ந்து, சுவாமி மாட வீதி உலா நடைபெற்றது. அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் சுவாமி புறப்பாடு வழக்கமாக ராஜகோபுரம் அடுத்த திட்டிவாசல் வழியாகவே நடைபெறும். ஆனால், ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடைபெறும் சுவாமி புறப்பாடு மட்டும் திருமஞ்சன கோபுரம் வழியாக நடைபெறுவது தனிச்சிறப்பாகும்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை