அண்ணாநகர்: அண்ணாநகர் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மனோகர் தலைமையில் போலீசார், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது ஆந்திராவில் இருந்து வந்த பேருந்தில் இருந்து 2 பெண்கள், கையில் பெரிய பார்சல்களுடன் இறங்கினர். அவர்களை பிடித்து அவர்களிடம் இருந்த பார்சலை சோதனை செய்தபோது, கஞ்சா இருப்பது தெரிந்தது.
விசாரணையில் அவர்கள், பாண்டிச்சேரியை சேர்ந்த மேகவாணி (38), குமாரி (62) என்பதும், பல வருடங்களாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து, பாண்டிச்சேரி, காஞ்சிபுரம், திண்டிவனம், கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேருந்து நிலையத்தில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடம் இருந்து 22 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.