ஆதிதிராவிடநலப்பள்ளியில் தற்காலிக பட்டதாரி ஆசிரியர்கள் பணி

தஞ்சாவூர், ஜூலை 5: தஞ்சாவூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் கீழ்கண்ட பணியிடங்கள் காலிப்பணியிடமாக உள்ளன. கீழப்புனவாசல், அரசு ஆதிந மேல்நிலைப்பள்ளியில் ஒர் பட்டதாரி ஆசிரியர் பணியிடம், முத்துவீரகண்டியன்பட்டி, அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளியில் ஒர் அறிவியல் மற்றும் ஒர் சமூக அறிவியல் ஆகா இரண்டு பணியிடம், கல்லுாரணிக்காடு. அரசு ஆதிந உயர்நிலைப்பள்ளியில் ஒர் கணிதம் பணியடம் காலிப்பணியிடங்களில் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் தற்காலிகமாக பணிபுரிய தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்களிடமிருந்து எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ, அஞ்சல் மூலமாகவோ உரிய கல்வித்தகுதி சான்று நகல்களுடன் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், தஞ்சாவூர் 613010 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம். மேற்கண்ட காலிப்பணியிடத்தில் பட்டப்படிப்பு (B.A., & B.Sc.,) ஆசிரியர் தகுதித்தேர்வு மற்றும் B.Ed., முடித்திருத்தல் வேண்டும். தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15,000 ஊதியமாக நியமிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள் 02.07.2024 முதல் 08.07.2024 பிற்பகல் 04.00 மணிக்குள் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும். மேற்கண்ட தற்காலிக ஆசிரியர்கள் பதவிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தகுதிவாய்ந்த பணிநாடுநர்கள் பட்டதாரி ஆசிரியர் நிலையில் இருப்பின் ஆசிரியர் தகுதித்தேர்வு (TET PAPER II) தேர்ச்சி பெற்றவர்களுக்கும், அவ்வாறு இல்லையெனில் இல்லம் தேடிக்கல்வித் திட்டத்தில் பணிபுரியும் தகுதியான தன்னார்வலர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் காலிப்பணியிடங்களாக உள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரப் பணியாளர்களைக்கொண்டு நிரப்பும்வரை தகுதிபெற்ற பணிநாடுநர்களைக் கொண்டு சம்பந்தப்பட்ட பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிகமாக நிரப்பிக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது. நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு காலிப்பணியிடம் நிரப்பப்படும் நாள் முதல் பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்பட்ட தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்கள் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை பணியில் நியமனம் செய்யப்படும் நாள் முதல் ஏப்ரல்-2025 முடிய உள்ள மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மைக்குழு மூலம் பணியமர்த்தப்படும். மேலும், கூடுதல் விவரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் முதல் தளத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்நல அலுவலகத்தினை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை