சேலம், ஜூன் 14: சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநகர செயலாளர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் வந்தனர். அவர்களுடன் சேலம் 4 ரோடு டிவிஎஸ் பகுதியில் உள்ள மயானத்தில் வேலை பார்த்து வரும் ஆதரவற்ற பெண் சீதா வந்திருந்தார். அவருடன் சென்று கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை மனுவை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது: சேலம் டிவிஎஸ் பஸ் நிறுத்தம் எதிரில் உள்ள 17வது வார்டுக்கு உட்பட்ட மயானத்தை சிறு வயதிலிருந்தே சீதா என்ற பெண் பராமரித்து வருகிறார். மயானத்தில் அனைத்து வேலைகளையும், தனி ஒரு பெண்ணாக செய்து வருகிறார். அவருக்கு பெற்றோர் இல்லை. சிறுவயதிலிருந்தே ஆதரவின்றி மயானத்தில் வேலை செய்து வாழ்ந்து வருகிறார். அவருக்கு வசிக்க இடம் இல்லை. வேறு வேலையும் இல்லை. அதனால், சீதாவிற்கு தங்குமிடம் மற்றும் நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.