ஆட்டோ ஓட்டியபடி கல்லூரியில் படிக்கும் மாணவனை வெட்டி வழிப்பறி

திருவொற்றியூர்: அரும்பாக்கம் திருவீதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த குமாரசாமி மகன் சின்னையா (19). தனியார் கல்லூரியில் பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். பகுதி நேரமாக வாடகைக்கு ஆட்டோ ஓட்டி வரும் இவர், அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து, படித்து வருகிறார்.  நேற்று முன்தினம்  இரவு மாதவரம் ரவுண்டானா அருகில் இருந்து 200 அடி சாலையில் இவர் சென்றபோது, ஆட்டோவில் ஏறிய ஒருவர், நான் சொல்லும் இடத்தில் ஆட்டோவை நிறுத்தினால், அங்குள்ள தெரிந்த நபர்களிடம் சவாரிக்கான பணம் பெற்று தருவேன்,’ என்று கூறியுள்ளார்.இதை நம்பிய சின்னையா, அந்த நபர் கூறிய இடத்தில் ஆட்டோவை நிறுத்தினார். அங்கு, பைக்குடன் நின்று கொண்டிருந்த இருவர், ஆட்டோவில் வந்த நபருடன் சேர்ந்து, சின்னையாவை அரிவாளால் வெட்டி, அவர் வைத்திருந்த ரூ.6 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு 3 பேரும் தப்பினர். படுகாயமடைந்த சின்னையாவை அக்கம் பக்கத்தினர் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மாதவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து,  வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர்….

Related posts

கடப்பாவிலிருந்து சென்னைக்கு அனுப்ப இருந்தது ₹1.60 கோடி செம்மரம் கடத்திய 4 பேர் கைது

பா.ஜ.க. வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது

தென்காசியில் கொலை குற்றவாளிகள் இருவருக்கு குண்டாஸ்