ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

திருச்சி, ஜூலை 3: தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்தாய்வு மையங்கள் முன்பாக நடத்தும் மறியல் போராட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கலந்து கொள்ளாது என அச்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழக அரசின் அரசாணை எண் 243 அடிப்படையில் நடைபெறும் கலந்தாய்வை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வரவேற்கிறது. அரசாணை எண் 243 மாநில முன்னுரிமையை முன் நிறுத்துவதால் ஒன்றிய முன்னுரிமை பாதிக்கப்படவதாக கூறுவது தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் இரட்டை வேடமாகும். ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு அவசியம் என்பது குறித்து ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், பணியிட மாறுதல் ஒன்றே தற்போது தொலைதூரத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதலாகும். இந்த உண்மையை உணர்ந்தும் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்ற மறியல் போராட்டத்திற்கு ஆர்வம் காட்டும் ஆசிரியர் கூட்டமைப்புகள், ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்வுக்கு என்பதை அரசு மாற்றி ஆசிரியர் தகுதி தேர்வு பதவி உயர்விற்கு அவசியமில்லை என அரசு கொள்கை முடிவாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கருத்தை இன்று வரை அரசே வலியுறுத்தவில்லை.

மாறாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்புகள் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு மட்டும் நடக்கக்கூடாது என கண்மூடித்தனமாக போராட்டத்தை அறிவித்துள்ளது. ஒன்றியத்திற்கு சந்தா வாங்கி, சங்கம் வளர்க்கும் கூட்டமைப்புகள் தன் கீழுள்ள ஆசிரியர்கள் வேறு ஒன்றியத்திற்கும், மாவட்டம் விட்டு மாவட்டம் பணியிட மாறுதலில் செல்ல விடாமல் கூண்டுக்கிளிகளாக அடைத்து வைத்து ஒன்றியத்தில் பணியாற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகாமல் நேரடியாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆகவே இந்த போராட்டம் என்பதை அனைத்து இடைநிலை ஆசிரியர்களும் உணர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு அரசாணை எண் 243 எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

பழைய ஓய்வூதியம், சம வேலைக்கு சம ஊதியம், 2004-2006ம் ஆண்டில் பணியேற்ற ஆசிரியர்களுக்கான பணி வரன்முறை, ஊக்க ஊதிய உயர்வு, ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் உள்ளிட்ட எண்ணற்ற ஆசிரியர் மாணவர் நலன் சார்ந்த கோரிக்கைகளுக்கு போராடாமல் அரசாணை எதிர்ப்பு என்ற ஒற்றை கோரிக்கைக்காக தன் இன ஆசிரியர்களை திசை திருப்பி மறியல் போராட்டத்திற்கு அழைக்கிறது சுயநலம் மிக்க இந்த கூட்டமைப்புகள். கடந்த 19 ஆண்டுகளுக்கு மேலாக நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி தகுதி இருந்தும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மறுக்கப்பட்டு, தற்போது அரசாணை எண் 243ன்படி பதவி உயர்வு பெற இருக்கும் நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் அனைவரும் இன்று ஜூலை 3 அன்று முதல் பள்ளிக்கு சென்று பணிபுரிவார்கள் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துக் கொள்கிறது. அடுத்தவரின் உரிமையை நசுக்கும் தொடக்கக்கல்வி ஆசிரியர் கூட்டமைப்புகள் இன்று (ஜூலை3) நடத்தும் மறியல் போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்