சிவகங்கை, ஜூலை 26: சிவகங்கை 21ம் நூற்றாண்டு மேல் நிலைப்பள்ளியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 7வது ஆசிய சாம்பியன்ஸ் ஆடவர் ஹாக்கிப் போட்டி கோப்பை அறிமுக விழா நடந்தது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான 7வது ஆடவர் ஹாக்கி போட்டிகள் 3.8.2023 முதல் 12.8.2023 வரை சென்னையில் நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், சீனா, மலேசியா ஆகிய அணிகள் பங்கு பெறவுள்ளன. இப்போட்டியில் சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு வழங்கப்படும் கோப்பை தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக நேற்று சிவகங்கையில் கோப்பை அறிமுக விழா நடந்தது. கலெக்டர் ஆஷாஅஜித் தலைமை வகித்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கோப்பையை அறிமுகம் செய்தார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் தமிழரசி ரவிக்குமார், மாங்குடி, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மஞ்சுளா பாலசந்தர், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், ஊராட்சி மன்றத் தலைவர் மணிமுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ்கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.