கரூர், ஆக. 12: சுதந்திர தினமான வரும் 15ம் தேதியை மது இல்லாத நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் அன்றைய தினம் மது விற்பனைக்கு தடைவிதித்து, கரூர் கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினவிழா அன்று கரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், ‘எப்எல்3’ உரிமம் பெற்ற ஹோட்டல்களில் மது இல்லா நாளாக அனுசரிக்கப்பட வேண்டும். அன்றைய தினம் கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (டாஸ்மாக் கடைகள்), ‘எப்எல்3’ உரிமக் கூடங்கள் மூடப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.