ஆக்கிரமிப்பு சுடுகாட்டு இடம் அதிரடி அகற்றம் ஒடுகத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தில்

 

ஒடுகத்தூர், ஏப். 27: ஒடுகத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுடுகாட்டு இடம் நேற்று அதிரடியாக அகற்றப்பட்டது.ஒடுகத்தூர் அடுத்த பூஞ்சோலை கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமம் தோன்றியது முதல் ஓரிரு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் தற்போது 70க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப்பகுதியில், கிராமத்திற்கு சொந்தமாக சுமார் 40 சென்ட் இடம் சுடுகாட்டிற்காக ஒதுக்கப்பட்டது. இதனால், கிராமத்தில் யாரேனும் இறந்து போனால் இங்கு கொண்டு வந்து தான் எரிக்கவோ, புதைக்கவோ செய்து வந்தனர்.

ஆனால், காலப்போக்கில் சுடுகாட்டை அதே பகுதியை சேர்ந்த தனி நபர் ஒரு ஆக்கிரமித்து பயிர் செய்து வந்தார். இதனால், சடலங்களை அடக்கம் செய்ய கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடம் பல முறை மனு கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்க வில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இந்நிலையில், பூஞ்சோலை கிராமத்தில் நேற்று ராமக்கா என்ற மூதாட்டி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதனால் அவரது சடலத்தை எரிப்பதற்காக அவரது உறவினர்கள் சுடுகாட்டை பகுதியில் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், இங்கு சடலத்தை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது என்று ஆக்கிரமிப்பு செய்த நபர் கிராம மக்களிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்து பயிர் வைத்துள்ள இடத்தை உடனே அகற்றி சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த வேப்பங்குப்பம் போலீசார், வருவாய்த் துறையினர், ஊராட்சி மன்ற பூங்கொடி ராமன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த இடத்தை முறையாக அளவிடு செய்து சுடுகாட்டிற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்