அவனியாபுரம் அயன்பாப்பாகுடி கண்மாயில் கழிவுநீர் கலப்பதை தடுக்க மனு

மதுரை, ஆக. 15: மதுரை அருகே அவனியாபுரம் பொதுமக்கள் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அதில், ‘அவனியாபுரம் பகுதியில் மிகப்பெரிய கண்மாயாக அயன் பாப்பாக்குடி கண்மாய் உள்ளது. இக்கண்மாயில் தேக்கப்படும் நீர் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் உயர்வுக்கு உதவி வருகிறது. இந்த கண்மாய்க்கு திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயிலிருந்து உபரி நீர் வருகிறது. இந்நிலையில் பழங்காநத்தம், முத்துப்பட்டி, ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரம் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் இக்கண்மாயில் கலக்கிறது. மேலும் இக்கண்மாயின் மடை திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளது.

இக்கண்மாயில் இருந்து நீர் வெளியேறும் கால்வாய் தூர்வாரப்படாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதனால் கண்மாயில் நீர் பெருகி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் மலேரியா, டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாய நிலையும் நிலவுகிறது. எனவே மாவட்ட கலெக்டர் கண்மாயை ஆய்வு செய்து கண்மாய் கரைகளை பலப்படுத்தி நீர் வெளியேறும் கால்வாயை தூர்வாரி தருவதுடன், கண்மாய்க்குள் கலக்கும் கழிவுநீரை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை