திருவில்லிபுத்தூர்: அழகர் அணிந்த பட்டுப்புடவை நேற்று திருவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு இறங்குவது வழக்கம். இதற்காக திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் நிர்வாகத்தின் சார்பில் உரிய மரியாதையுடன் மதுரைக்கு ஆண்டாள் சூடிய மாலை கொண்டு செல்லப்படும். அதன்படி, இந்தாண்டு ஆண்டாள் மாலை மற்றும் கிளி வஸ்திரம் ஆகியவை கொண்டு செல்லப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது ஆண்டாள் சூடிய மாலையை அணிந்து கொண்டு ஆற்றில் இறங்கினார்.அதற்கு பதிலாக மதுரை அழகர் கோயில் நிர்வாகத்தின் சார்பில், அழகர் அணிந்த பட்டுப்புடவை மற்றும் பட்டு கயிறு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு கொடுக்கப்பட்டது. நேற்று திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் ரங்கமன்னார் ஊஞ்சலில் அமர்ந்து இருந்தபோது, ஆண்டாளுக்கு அழகர் அணிந்திருந்த பட்டுப்புடவை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்து ராஜா ஆகியோர் செய்திருந்தனர்….