உசிலம்பட்டி, ஜூன் 22: நெல்லையில் கடந்த வாரம் சாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவு அளித்ததை கண்டித்து, நெல்லை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிணைந்து மதுரை மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்., கட்சி அலுவலகம் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.