அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே பதுக்கல் மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். அலங்காநல்லூர் அருகே உள்ள வாகைகுளம் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சார்பு ஆய்வாளர் அண்ணாதுரை மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன்(43), சதீஷ்(36), தவமணி(49) ஆகியோர் அப்பகுதியில் நின்றிருந்த ஆட்டோவிற்குள் பதுங்கி இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் அடைந்த போலீசார் ஆட்டோவில் இருந்த சாக்கு முட்டையை சோதனையிட்டனர். அப்போது அதில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை சுற்றி வளைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து 54 மது பாட்டில்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.