அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மணமேல்குடி அருகே உள்ள ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம்(58). முன்னாள் ஜமாத் தலைவர். இவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் ஆப்டிக்கல் ஷோரூம் வைத்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்தார். இவரது மனைவி ஆயிஷா பீவி(48). இவர்களது மகன்கள் ராஜாமுகமது(28), ஷேக் அப்துல் காதர்(25), மகள் பர்கானா(26). இதில் ராஜா முகமது மற்றும் பர்கானாவிற்கு திருமணமாகி தனித்தனியே வெளியூரில் வசித்து வருகின்றனர். ஷேக் அப்துல் காதர் தந்தையுடன் ஆப்டிகல் ஷோரூமை சேர்ந்து நடத்தி வருகிறார். இவர்கள் வாரந்தோறும் சனி, ஞாயிறு மற்றும் விசேஷ நாட்களில் ஊருக்கு வருவர். தற்போது ரம்ஜான் நோன்புக்காக முகமது நிஜாம் ஊருக்கு வந்து தங்கியுள்ளார்.இந்நிலையில் ஆவுடையார்பட்டினத்தில் உள்ள வீட்டில் நேற்றிரவு முகமதுநிஜாம், ‘மனைவி ஆயிஷா பீவியுடன் இருந்தார். நோன்பு இருப்பதால் இரவு 11 மணியளவில் முகமது நிஜாம் திராவியா தொழுகையை முடித்துவிட்டு வீட்டு வாசலில் உள்ள வராண்டாவில் அமர்ந்து செல்போனை பார்த்துக்கொண்டிருந்தார். ஆயிஷாபீவி வீட்டிற்குள் இருந்தார். இந்தநிலையில் மர்மநபர்கள் 3 பேர், திடீரென வீட்டின் சுற்று சுவரில் ஏறி வீட்டிற்குள் குதித்தனர். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த முகமது நிஜாமினை மர்மநபர்கள் சுற்றி வளைத்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.பின்னர் அவர்கள், வீட்டுக்குள் புகுந்து ஆயிஷாபீவியை நாற்காலியில் கட்டிப் போட்டுவிட்டு கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் பீரோ சாவியை பெற்று மர்மநபர்கள், பீரோவை திறந்து அதிலிருந்த 175 பவுன் நகை மற்றும் ரூ.20 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பியோடினர். ஆயிஷா பீவி கட்டிவைக்கப்பட்டிருந்த நிலையில் மெல்ல மெல்ல சென்று செல்போன் மூலம் அக்கம்பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து ஆயிஷா பீவீயை மீட்டனர். பின்னர் ஆயிஷா பீவி வராண்டாவிற்கு சென்று பார்த்தபோது, அங்கு ரத்த வெள்ளத்தில் கணவர் இறந்து கிடந்ததை பார்த்து கதறினார். இதுகுறித்து அவர்களது மகன், மகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவரது வீட்டு முன் அப்பகுதியினர் திரண்டனர்.இதுகுறித்து தகவலறிந்த மணமேல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். திருச்சி சரக டிஐஜி சரவணசுந்தர், புதுக்கோட்டை எஸ்பி நிஷா பார்த்திபன் நேரில் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து போலீசார் முகமது நிஜாமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைரேகை நிபுணர், மோப்பநாய் வரவழைக்கப்பட்டு, கொள்ளையர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். …