அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் இருந்து தினமும் சென்னைக்கு ரயில் இயக்க வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகரில் சுமார் 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். அருப்புக்கோட்டையில் உள்ள ரயில்வே நிலையம் கடந்த 2006 வரை மீட்டர்கேஜ் பாதையாக இருந்தபோது தினசரி சென்னைக்கு ரயில் இயக்கப்பட்டது. அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட பிறகு சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் இயக்கப்படுகிறது. தினந்தோறும் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 700 பேர் வரை சென்னைக்கு சென்று வருகின்றனர்.அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் இயக்கப்படாத நாட்களில் ஆம்னி பேருந்துகள் மற்றும் மதுரை, விருதுநகர் ரயில் நிலையங்களுக்கு சென்று சென்னைக்கு செல்கின்றனர். இதனால் காலநேரமும், பணவிரயமும் ஏற்படுகிறது. எனவே அருப்புக்கோட்டையிலிருந்து சென்னைக்கு தினசரி ரயில் இயக்கவேண்டும் என அருப்புக்கோட்டை வர்த்தக சங்கதலைவர் சுதாகர், செயலாளர் சங்கரநாராயணன், பொருளாளர் காசிமுருகன் ஆகியோர் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்….