அரியலூர், செப். 25: அரியலூர் அரசு கலைக் கல்லூரி கலையரங்கில், நாட்டு நலப் பணித் திட்ட நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, அக்கல்லூரியின் முதல்வர் ரவிச்சந்திரன் தலைமை வகித்து, நாட்டு நலப் பணித் திட்டம் போன்ற தன்னார்வ பணிகளில் ஈடுபடும் போது, ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். மாணவப் பருவத்தில் கல்வியோடு ஆற்றும் தொண்டு போற்றுதலுக்குறியது என்றார்.
அக்கல்லூரி நாட்டு நலப் பணித் திட்ட அலுவலர் கருணாகரன், நாட்டு நலப் பணித் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு, நோக்கம், அதன் செயல்பாடுகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். தமிழ்த்துறை பேராசிரியர் தமிழ்மாறன் பேசுகையில், அன்னைத் தெரசா போன்றோர் எவ்வித பிரதிபலனும் பாராமல் சேவை என்பதை தனது குறிக்கோளாகக் கொண்டு தனது வாழ்நாளையே அர்ப்பணித்தவர்கள் பலர்.
எனவே கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரும் இந்த நாட்டு நலப் பணித் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற வேண்டும் என்றார். தொடர்ந்து தூய்மை இந்தியா உறுதிமொழி எடுக்கப்பட்டு, சிறப்பாக செயலாற்றிய தொண்டர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக நாட்டு நலப் திட்ட அலுவலர் ( அலகு – 2) கோ.பன்னீர்செல்வம் வரவேற்றார். முடிவில் திட்ட அலுவலர் (அலகு – 3) மேரி வைலட் கிருஸ்டி நன்றி கூறினார்.