அரியலூர், நவ.10: அரியலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு படித்தவர்களுக்கு டிப்ளமோ மற்றும் ஐடிஐ படிப்பதற்கும், 12-ம் வகுப்பு படித்தவர்களுக்கு பட்டப்படிப்பு படிப்பதற்கும், கல்லூரிகளில் முதலாமாண்டு முதல் நான்காமாண்டு வரை படித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், முதுகலை கல்வி படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கல்வி கடன் மேளா/சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளதாவது:
அரியலூர் மாவட்ட நிர்வாகமும், அரியலூர் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து வங்கிகளும் இணைந்து நடத்தும் கல்விக் கடன் முகாம் வரும் 16ம் தேதி முற்பகல் 11 மணிக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் நடைபெறுகிறது. அரியலூர் மாவட்ட கலெக்டர் தலைமை வகிக்கிறார். கல்விக்கடன் பெற விரும்பும் மாணவர்கள் www.vidyalakshmi.co.in < http://www.vidyalakshmi.co.in/ > என்ற இணையதளத்தில் பதிவு செய்து முகாமில் கலந்து கொள்வது கல்விக் கடன் பரிசீலனையை எளிமையாக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
மேலும் மேற்படி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கலெக்டர் அலுவலகத்திலும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு, சாதிச் சான்று, 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், கடன் பெறும் வங்கி கணக்கு புத்தகம், ஆண்டு வருமான சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான கலந்தாய்வு அழைப்பு கடிதம், கல்லூரியில் சேர்ந்ததற்கான கடிதம்(Bonafied Cerficate), கல்லூரியின் சான்று, முதல் பட்டதாரி சான்று, உறுதி மொழி சான்று மற்றும் இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகிய ஆவணங்களுடன் முகாமில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.