அரசு மருத்துவர்கள் ஊதிய உயர்வு குறித்து புது அரசாணை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: அரசு மருத்துவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஊதிய உயர்வு குறித்து  புதிய  அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்  துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று சென்னை சைதாப்பேட்டை அரசு  மருத்துவமனையில் ரூ.2.5 கோடி மதிப்பிலான 14 டயாலிசிஸ் இயந்திரங்களை மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்த நிகழ்ச்சியில், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மருத்துவம் மற்றும் மக்கள்  நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும்  சைதாப்பேட்டை தலைமை  மருத்துவமனை மருத்துவர்,  ரோட்டரி சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் அளித்த பேட்டி: 100 ஆண்டு பழமையான சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையை, 200 படுக்கையுடன் ரூ.40  கோடி மதிப்பில் சிறப்பு மருத்துவமனையாகவும், ரூ.12 கோடி மதிப்பில்  ஒருங்கிணைந்த குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு கட்டிடமும் என மொத்தம் ரூ.52  கோடி மதிப்பில் அமைக்கப்படும். கடலூரில்  போலி மருத்துவர் சத்யசீலன் என்பவர் சிகிச்சை கொடுத்து 5 வயது குழந்தை  இறப்பு தொடர்பாக, மினி கிளினிக் இருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். குழந்தைகளுக்கான மருத்துவ சேவை அம்மா கிளினிக்கில் இருந்ததா, ஓராண்டுக்கான பணி என்று எழுதி வாங்கி கொண்டு தான் மருத்துவர்கள் பணி நியமனம்  செய்யப்பட்டனர். சத்யசீலன் என்ற போலி மருத்துவர், தஞ்சையிலும்,  எழும்பூரிலும் மருத்துவ படிப்பை முடித்த மற்றொரு சத்யசீலன் என்ற  மருத்துவரின் சான்றிதழை வைத்து, புகைப்படத்தை மட்டும் மாற்றி போலி  சான்றிதழ்களை கொண்டு ஐந்து வருடங்களாக மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.  திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. தகவல் தெரிந்தவுடன்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் போலி சான்றிதழ்  மூலம் மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வந்துள்ளார். அரசு  மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து அரசாணை 354 மற்றும்  அரசாணை 293 என இரண்டு உள்ளன. இந்த இரண்டு அரசாணைகளையும் சேர்த்து  யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் புதிய அரசாணை உருவாக்கும் பணி  நடைபெற்று வருகிறது.  இவ்வாறு பேசினார். …

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்