Sunday, June 30, 2024
Home » அரசு புறம்போக்கு நிலத்தில் கனிமவள கொள்ளை ஓபிஎஸ் உதவியாளர், 11 அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு: ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்

அரசு புறம்போக்கு நிலத்தில் கனிமவள கொள்ளை ஓபிஎஸ் உதவியாளர், 11 அதிகாரி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு: ரூ.500 கோடிக்கு கிராவல் மண் எடுத்த விவகாரம்

by kannappan

சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் கனிம வளங்களை கொள்ளை அடித்ததாக அதிமுகவை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளர், அதிகாரிகள் உட்பட 12 பேர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகா வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 80 ஏக்கர் நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடாக பெரியகுளம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளரும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உதவியாளருமான அன்னப்பிரகாஷ் உள்ளிட்ட தனியார் சிலருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளனர். இதுகுறித்து ஏற்கனவே சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியின்போது வடவீரநாயக்கன்பட்டியில் அரசு புறம்போக்கு நிலத்தை தவறாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் மதிப்புள்ள கனிமங்களை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் அளித்த புகாரின்பேரில், தேனி மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், வடவீரநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 80 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு அனுமதியின்றி பல கோடி ரூபாய் மதிப்பிலான கனிம வளங்களை கொள்ளையடித்தது தெரிய வந்துள்ளது. இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெரியகுளம் தாசில்தாராக இருந்த கிருஷ்ணகுமார், ரத்னமாலா, துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சீவ் காந்தி, விஏஓ சுரேஷ், சர்வேயர் பிச்சைமணி மற்றும் கனிம வளத்துறை அதிகாரிகளாக இருந்த 6 பேர் என மொத்தம் 12 பேர் மீது வழக்குப்பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஐகோர்ட்டில் தகவல்: தேனி மாவட்டம் உப்பார்பட்டியை சேர்ந்த ஞானராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வட வீரநாயக்கன்பட்டி கிராமத்தில் அரசு நிலங்களிலிருந்து அனுமதியின்றி ரூ.500 கோடி மதிப்பிலான கிராவல் மண்ணை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உதவியாளர் மூலமாக எடுத்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஓ.பன்னீர்செல்வம், தனது உதவியாளர் அன்னபிரகாசம் மற்றும் அவரது உறவினர்கள் மூலம் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார். அரசு நிலங்களிலிருந்து மணல் எடுத்த பிறகு அந்த நிலங்கள் தனியார் சொத்துகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிடக்கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், கனிம வளத் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள், வருவாய்த் துறையை சேர்ந்த 6 அதிகாரிகள் மற்றும் ஒரு தனி நபர் என 12 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்று கோரப்பட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று, அவகாசம் வழங்கிய நீதிபதி விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்….

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi