திருப்புத்தூர், ஜன.5: திருப்புத்தூர் நாகப்பா மருதப்பா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். விழாவிற்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித் தலைமை வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து வரவேற்றார். முன்னாள் அமைச்சர் தென்னவன், பேரூராட்சி தலைவர் கோகிலா ராணி, துணைத் தலைவர் காண்முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கூட்டுறவு துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், 11ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் 361 பேருக்கு, தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் குன்றக்குடி சுப்பிரமணியன், விரமதி மாணிக்கம், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, திருப்புத்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன், நகர துணைச் செயலாளர் உதயசண்முகம், ஒன்றிய பொருளாளர் கண்ணன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் கே.எஸ்.நாராயணன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் பள்ளி தலைமையாசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.