கோவை, டிச. 29: கோவை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வுகள் கடந்த வாரம் முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகள் வரும் ஜனவரி 2-ம் தேதி திறக்கப்படுகிறது. இந்நிலையில், அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ள 3-ம் பருவத்திற்கான பாடப்புத்தங்கள் கோவை வந்துள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு பிரித்து அளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தேவையான மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள் கோவை நல்லாயன் துவக்கப்பள்ளியில் இருந்து கோவை கல்வி மாவட்டத்தை சேர்ந்த துவக்கப்பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தை சேர்ந்த துவக்கப்பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அரையாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கும் நாளில் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் எனவும், அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.