ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு பள்ளியின் ஜன்னலை உடைத்து நோட்டுப் புத்தகங்களை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக நோட்டுப் புத்தகங்கள் ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில் இருக்கும் குடோன் அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று ரூ.90 ஆயிரம் மதிப்பிலான 12 அட்டைப் பெட்டிகளில் இருந்த நோட்டு புத்தகங்களை திருடிச் சென்றுள்ளனர்.இதுகுறித்து மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் சுதாகர் கேணிக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.