பெரும்புதூர், டிச.23: குன்றத்தூர் ஒன்றியம், படப்பை பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் ஒருவரால் 7 ஏக்கர் நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த இடத்தில் படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், அதே வளாகத்தில் பொதுப்பணிதுறை அலுவலகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கமும் இயங்கி வருகிறது. இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகம் மற்றும் குடோனிற்கு சாலை அமைப்பதற்காக படப்பை அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை அனுமதியின்றி நேற்று தனியார் சிலர் இடித்துள்ளனர். இதை அறிந்த பெற்றோர் ஆசிரியர்கள் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள் சம்பவ இடத்தில் கூடி, சற்றுச்சுவரை இடித்தவர்களை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.