கோவை செப்.21: கோவை சுகுணாபுரம் அருகே உள்ள சக்தி விநாயகர் கோயில் வீதியை சேர்ந்தவர் மன்சூர் அலி (30). ஆட்டோ டிரைவர். இவர், கிருஷ்ணா நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த அராத் நிசார் (45) என்பவர் கல் வீசி தாக்குதல் நடத்தினார். முன்னதாக, அவர் மன்சூர் அலியின் உறவினர் ஒருவர் மீதும் கல் வீசி தாக்குதல் நடத்தி இருந்தார்.
காயமடைந்த மன்சூர் அலி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக, குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அராத் நிசார் மீது கோவை நகரில் கடந்த 8 ஆண்டுகளில் 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கொலை முயற்சி, அடிதடி, மோதல், திருட்டு என பல்வேறு குற்றங்களில் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிகிறது. சுகுணாபுரம் பகுதியில் ரவுடியாக வலம் வந்த இவர், போலீஸ் தேடுவது அறிந்து தலைமறைவாகிவிட்டார். போலீசார் இவரை தேடி வருகின்றனர்.