அரசு பள்ளிக்கு இடம் ஒதுக்க டிஆர்ஓ ஆய்வு பெரணமல்லூர் அருகே

பெரணமல்லூர், ஆக. 14: பெரணமல்லூர் அருகே அரசு பள்ளிக்கு இடம் ஒதுக்க தோப்பு புறம்போக்கு இடத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம், கொழப்பலூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட ஆவணியாபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியை தரம் உயர்த்தி மேல்நிலை பள்ளியாக மாற்ற அப்பகுதி மக்கள் முடிவு செய்தனர். இதற்கான முயற்சியில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்திருந்தனர். ஆனால் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கூடிய அளவிற்கு இட வசதிஅங்கு இல்லை என காரணம் கூறப்பட்டது.

இதனால் பொதுமக்கள் ஆவணியாபுரம் மதுரா சஞ்சீவராயபுரம் பகுதியில் உள்ள பொதுப்பணி துறை ஆய்வாளர் மாளிகை அருகே இருந்த சுமார் 2 ஏக்கர் அளவில் இருந்த தோப்பு புறம்போக்கு இடத்தினை தேர்வு செய்துபள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் என கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து நேற்று மாலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி பொதுமக்கள் அளித்திருந்த மனுவில் கூறியிருந்த இடத்தினை ஆய்வு செய்து விரைவில் பள்ளி கல்வித்துறைக்கு இடத்தினை மாற்றம் செய்து தருவதாக உறுதியளித்தார். பொதுமக்களின் நீண்ட ஒரு போராட்டத்திற்கு பிறகு தங்கள் பகுதியில் செயல்படும் உயர்நிலைப்பள்ளி விரைவில் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயரும் என்ற நம்பிக்கையில் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்