நாமக்கல், ஆக.13: நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், திருச்செங்கோடு அருகே உள்ள இளநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் உமாவிடம் அளித்த கோரிக்கை மனு விபரம்: திருச்செங்கோடு தாலுகா இளநகர் கிராமத்தில், அரசுக்கு சொந்தமான நீர்நிலையான ஏரி, குளம், குட்டை, ஊரணி, கண்மாய் மற்றும் அவற்றுக்கான நீர்வழிப்பாதைகளில், தண்ணீர் வெளியேறும் பாதைகள் முழுவதுமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதனால், நீர்நிலைகளை பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. மழைக்காலங்களில் நீர் சேமிக்க முடியாமல் வீணாகிறது. எனவே, அரசுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.