கரூர், ஜூன் 15: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்ற அறிவியல் பாடங்கள் சம்பந்தமான கலந்தாய்வில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் அரசு கலைக் கல்லூரியில் 2024, 25ம் கல்வியாண்டில் இளங்கலை மற்றும் இளம் அறிவியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 30ம்தேதி அன்று சிறப்பு ஒதுக்கீட்டின் அடிப்படையில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் (முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், தேசிய மாணவர் படை, விளையாட்டு பிரிவு மாணவ, மாணவிகள் மற்றும் அந்தமான் நிகோபார் மாணவர்கள) நடைபெற்றது.
தொடர்ந்து முதற்கட்ட கலந்தாய்வுகள், ஜூன் 10ம்தேதி அன்று இளங்கலை மற்றும் ஆங்கில பாடப்பிரிவுகளுக்கும், 12ம்தேதி அன்று வணிகவியல், வணிக கணினி பயன்பாட்டியல் மற்றும் வணிக, நிர்வாகவியல், வரலாறு மற்றும் பொருளியல் ஆகிய பிரிவுகளுக்கு கலந்தாய் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நேற்று கல்லூரி வளாக ஆடிட்டோரியத்தில், இளம் அறிவியல் இயற்பியல், வேதியியல், கணிதம், புள்ளியியல், கனிணி அறிவியல், இளம் அறிவியல் விலங்கியல், தாரவியல், புவியியல், புவி அமைப்பியல், ஊட்டசத்து மற்றும் உணவு முறைகள் ஆகிய பாடப்பிரிவுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த கலந்தாய்வில் 140 மாணவ, மாணவிகள் தங்களுக்கான பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர். தொடர்ந்து, இரண்டாம் கட்ட கலந்தாய்வு, ஜூன் 24ம்தேதி முதல் 28ம்தேதி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.