திருவாடானை, ஜூன் 24: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியினை கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் மணிமேகலை ஒருங்கிணைத்திருந்தார். இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். கல்லூரி முனைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.
இதில் மகளிர் அதிகாரத்திற்கான யோகா தனக்கும் சமூகத்திற்குமான யோகா என்ற தலைப்பில் கணிதத் துறை தலைவர் முனைவர் செல்வம் உரையாற்றினார். மேலும் ஒருவருடைய தனிப்பட்ட வாழ்வில் யோகா செய்வது உடல்நலத்திற்கும்,மனநலத்திற்கும் எவ்வாறு நலம் பயக்கிறது என்பதை விரிவாக எடுத்துக் கூறினார். தொடர்ந்து கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த நிகழ்வில் முனைவர் செல்வம் மற்றும் பேராசிரியை ஹெபியா ஆகியோர் யோகாசனங்களை செய்து காட்ட மாணவர்கள் உற்சாகத்துடன் அவர்களும் அந்த யோகாசனங்களை செய்தனர். சர்வதேச யோகா தினத்தன்று யோகாசனத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொண்டதும், யோகாசனம் செய்ய கற்றுக் கொண்டதும் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் கூறினர். ஏற்பாட்டினை கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் சரவணன், ஷர்மிளா செல்வி மற்றும் தொண்டியம்மாள் ஆகியோர் செய்திருந்தனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள், கெளரவ விரிவுரையாளர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.