அரக்கோணம்: அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 4 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து இறந்தனர். இதற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் ெகாரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் 796 பேருக்கு தொற்று உறுதியானது. இவர்களில் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர்கள் 291 பேர். தற்போது அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தனியார் பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரிகளில் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில், அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 4 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் திடீரென உயிரிழந்துவிட்டதாக தகவல் பரவியது. இதுகுறித்து தகவலறிந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) செந்தாமரைகண்ணன் நேற்று காலை அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு வந்து ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை, ஆக்சிஜன் வைக்கப்படும் குடோன், மருந்து மாத்திரை கையிருப்பு, கொரோனா வார்டு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, தலைமை மருத்துவர் நிவேதிதாவிடம் கேட்டறிந்தார். பின்னர் செந்தாமரைக்கண்ணன் கூறுகையில். ‘‘யாரும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை. கொரோனா வார்டில் 110 படுக்கைகள் உள்ளது. மொத்தமாக 24 ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளது’’ என்றார். …