அரக்கோணத்தில் சென்னை வாலிபர் கொலை ரயிலில் தப்ப முயன்ற 2 பேர் சேலத்தில் கைது

சென்னை, ஆக. 10: அரக்கோணத்தில் சென்னை வாலிபரை ஓட ஓட வெட்டிக்கொலை செய்துவிட்டு, ரயிலில் தப்பிவந்த 2 பேரை சேலத்தில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்தவர் பிராங்க்ளின் (26), அரக்கோணம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 6ம் தேதி இரவு பிராங்க்ளின், அரக்கோணம் ரயில்வே ஸ்டேசன் அருகே நடந்து வந்த இவரை 5 பேர் கும்பல், கத்தியால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது. தகவலறிந்து சென்ற அரக்கோணம் போலீசார், படுகாயமடைந்த பிராங்க்ளினை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக 4 தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட இருவர், தன்பாத் ரயிலில் சேலம் வழியாக தப்பிச் செல்ல உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் ரயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் தலைமையிலான ரயில்வே போலீசார், நேற்று அதிகாலை சேலம் வந்த தன்பாத் ரயிலில் ஏறி அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, முன்பதிவில்லா பெட்டியில் பொதுமக்களுடன் அமர்ந்திருந்த இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சென்னை ரெட்ஹில்ஸ் பவானி நகரைச் சேர்ந்த ேலாகேஷ்வரன் (28) மற்றும் மணலியைச் சேர்ந்த கார்த்தி (28) என்பதும், அரக்கோணம் ரயில் நிலையத்தில் பிராங்க்ளினை கொலை செய்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், ஜங்சன் ரயில்வே போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வந்தனர். பின்னர், அரக்கோணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து வரவழைத்து, அவர்களிடம் ஒப்படைத்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்