அயோத்தியா மண்டபம் விவகாரம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஐகோர்ட் மறுப்பு

சென்னை: மேற்கு மாம்பலத்தில் உள்ள ராம் சமாஜ் அமைப்பு நடத்தும் அயோத்தியா மண்டபத்தை கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கில் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் வரும் 21ம் தேதி இறுதி வாதம் நடைபெறும் என்றும் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு மாம்பலத்தில் ஸ்ரீ ராம் சமாஜ் என்ற அமைப்பின் மூலம் அயோத்தியா மண்டபம் 1954ம் ஆண்டு கட்டப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்தது. அந்த அமைப்பு நிதி முறைகேடுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்த நிலையில், அயோத்தியா மண்டபத்தை கடந்த 2013ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கொண்டுவந்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ராம் சமாஜ் அமைப்பு சார்பில் கடந்த 2014ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் கடந்த வாரம் தனி நீதிபதி வி.எம்.வேலுமணி பிறப்பித்த உத்தரவில், ராம் சமாஜ் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து ராம் சமாஜ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.வி.தமிழ்ச்செல்வி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ஸ்ரீ ராம் சமாஜ் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி, 2004ம் ஆண்டு வரை நிர்வாக குழுவில் இருந்தவர்கள் விலகிய பின்னர். அதன் நிர்வாகிகள் மீது அறநிலையத் துறையிடமும், சி.எம்.டி.ஏ.விடமும் தொடர் புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில், 2013 டிசம்பர் 31ம் தேதி அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அயோத்தியா மண்டபம் கொண்டுவரப்பட்டது. ராம் சமாஜ் என்பது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்ட 15 நபர்கள் மூலம் நடத்தப்படுகிறது. எந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர்களால் நடத்தப்படவில்லை. அரசு ைகயகப்படுத்தியதை எதிர்த்து போராடிய மூத்த குடிமக்கள் உள்ளிட்டோரை கைது செய்து காவல்துறை மேற்கு மாம்பலத்தை ஸ்தம்பிக்க வைத்துள்ளது. நிர்வாகிகளும், அறங்காவலர்களும் தனித்தனியாக மேல்முறையீடு செய்துள்ளனர். திருமண மண்டபமும் புக்கிங் செய்த நிலையில் உள்ளதால் அங்கு வருபவர்களை தடுக்கக்கூடாது என்று வாதிட்டார். தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, அறநிலையத்துறை இணை ஆணையரால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை கடந்த வாரம் தனி நீதிபதி உறுதி செய்துள்ளார். அதன் அடிப்படையில் அயோத்தியா மண்டபத்தின் நிர்வாகம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. சட்டம் -ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அயோத்தியா மண்டபம் திறக்கப்பட்டு பூஜைகள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு நடத்தும் பள்ளிக்கு எந்த தொந்தரவும் தரவில்லை. கல்யாண மண்டபத்தை அவர்களே பயன்படுத்தலாம். விரிவான பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும். இந்த வழக்கில்  விரைவில் இறுதி வாதங்களை முன்வைக்க தயார் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழக அரசும், அறநிலையத் துறையும் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதுவரை மேல்முறையீடு வழக்கில் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று தெரிவித்தனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு