ராமநாதபுரம், ஜூலை 27: திருஉத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலுக்குள் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருஉத்தரகோசமங்கையில் புகழ்பெற்ற சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது.இங்கு வழக்கமான நாட்கள் மற்றும் வெள்ளி, செவ்வாய், பவுர்ணமி, அமாவாசை, வளர்பிறை தேய்பிறை பஞ்சமி ஆகிய நாட்களில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் தேய்பிறை பஞ்சமி என்பதனால் இரவு 8 மணிக்கு நடை சாற்றும் வரை பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
7 மணி அளவில் சுமார் 6 அடி நீளமுள்ள நாகப்பாம்பு ஒன்று கோயிலுக்குள் புகுந்தது. பக்தர்கள் கூட்டத்தை பார்த்து, அது மடப்பள்ளி எனப்படும் சமையல் அறைக்குள் புகுந்தது. இதனையடுத்து கோயில் நிர்வாகம் சார்பில் ஏர்வாடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வீரர்கள் வந்து பதுங்கி கிடந்த பாம்பை பிடித்து சென்று, வனத்துறை காட்டுப் பகுதியில் பாதுகாப்பாக விட்டுச் சென்றனர்.