அண்ணாநகர்: திருமங்கலம் பகுதியில் உள்ள மால் வளாகத்தில் செயல்படும் பிரபல ஓட்டலில் கடந்த 2 நாட்களுக்கு முன், வாடிக்கையாளர் வாங்கிய சோலா பூரியில் கரப்பான் பூச்சி மற்றும் புழுக்கள் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி, அந்த ஓட்டலின் சமையல் அறையை பூட்டினர். இந்நிலையில், மீண்டும் ஒரு பிரபல ஓட்டலின் உணவில் பாட்டில் துண்டு கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் குமரன். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள பிரபல ஓட்டலில் சிக்கன் பிரைட் ரைஸ் ஆர்டர் செய்தார். அப்போது, அதில் பாட்டில் துண்டுகள் இருந்ததை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து, ஓட்டல் மேலாளரிடம் கேட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளார். ஆனால், அவர்கள் முறையான பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. இதனால், அவர் வாட்ஸ்அப் மூலமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு இதுகுறித்து புகார் தெரிவித்தார். அதன்பேரில், சென்னை மாவட்ட அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் கொண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்கு சென்று ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கினர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில்,‘‘இந்த ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸில் பாட்டல் துண்டுகள் இருப்பதாக புகார் வந்தது. அந்த ஓட்டலை ஆய்வு செய்து நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை விடுத்துள்ளோம். மறுபடியும் இதேபோல் புகார்கள் வந்தால் ஓட்டல் சீல் வைக்கப்படும்’’என்றார்….