அமைச்சர் முத்துசாமி எச்சரிக்கை மஞ்சள் விலை வீழ்ச்சி: ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்தது

ஈரோடு, செப்.14: மஞ்சள் விலை ஒரே மாதத்தில் குவிண்டாலுக்கு ரூ.2ஆயிரம் குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் பெருந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடங்கள், ஈரோடு, கோபிசெட்டிபாளையம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்கள் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்துக்கு ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தவிர ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு மஞ்சள் கொண்டு வரப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மஞ்சள் விலை உயராமல் இருந்து வந்ததால் விவசாயிகள் கடும் நெருக்கடியில் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 15ம் தேதியில் இருந்து மஞ்சள் விலை குவிண்டால் ரூ.10 ஆயிரத்தை கடந்து விற்பனையானது. தொடர்ந்து விலை உயர்ந்து, ஆகஸ்டு 12ம் தேதி அதிகபட்சமாக ரூ.15ஆயிரத்து 300ஐ கடந்து விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், மஞ்சள் விலை மீண்டும் குறைய தொடங்கியது. இம்மாத தொடக்கத்தில் இருந்தே மஞ்சளின் விலை அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்துக்குள் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில், இந்த விலை மேலும் குறைந்து நேற்று அதிகபட்சமாக குவிண்டாலு ரூ.12,100க்கு விற்பனையானது. இதன் மூலமாக கடந்த ஒரே மாதத்தில் சுமார் ரூ.2 ஆயிரம் வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இது குறித்து, ஈரோடு மஞ்சள் வியாபாரிகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்கள் சங்க செயலாளர் சத்தியமூர்த்தி கூறுகையில்,“சில்லரை விற்பனையை பொறுத்து தான் மஞ்சளின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது, சில்லரை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால், கிடங்குகளில் கொள்முதல் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளது. அதேநேரம் பழைய மஞ்சள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதில், 10 சதவீதம் மட்டுமே தரமான மஞ்சளாக உள்ளது. ஆன்லைன் வர்த்தகமும் மந்தமாக காணப்படுகிறது.

மேலும், மஞ்சளின் வரத்தும் கடந்த சில நாள்களாக குறைவாகவே உள்ளது. தரம் மாறுபடுவதால் ஒவ்வொரு மார்க்கெட்டுக்கும் இடையிலான அதிகபட்ச விலையில் அதிக வித்தியாசம் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக தேக்கம் அடைந்த பழைய மஞ்சளும் 25 சதவீதம் விற்பனைக்கு வருகிறது” என்றார்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது