ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இலங்கை அணி 157 ரன்னுக்கு சுருண்டது. தி வாண்டரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கிய இப்போட்டியில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் கருணரத்னே பேட்டிங்கை தேர்வு செய்தார். குசால் பெரேராவுடன் இணைந்து இன்னிங்சை தொடங்கிய அவர் 2 ரன்னில் வெளியேறினார். குசால் பெரேரா – லாகிரு திரிமன்னே ஜோடி 2வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 52 ரன் சேர்த்தது. குசால் 60 ரன் (67 பந்து, 11 பவுண்டரி) விளாசி முல்டர் பந்துவீச்சில் மார்க்ரம் வசம் பிடிபட்டார். திரிமன்னே 17 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.20 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 71 ரன் எடுத்திருந்த இலங்கை அணி, 29.5 ஓவரில் 110 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. ஓரளவு தாக்குப்பிடித்த வனிந்து ஹசரங்கா டிசில்வா 29 ரன், துஷ்மந்த சமீரா 22 ரன் எடுக்க, இலங்கை 40.3 ஓவரிலேயே 157 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. விஷ்வா பெர்னாண்டோ 2 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் அன்ரிச் நோர்ட்ஜ் 14.3 ஓவரில் 1 மெய்டன் உட்பட 56 ரன் விட்டுக்கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். வியா முல்டர் 3, சிபம்லா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்ரிக்கா முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்துள்ளது.எல்கர் 92 ரன், வாண்டெர் டுஸன் 40 ரன்னுடன் களத்தில் உள்ளனர். …
அன்ரிச் நோர்ட்ஜ் அபார பந்துவீச்சு: 157 ரன்னில் சுருண்டது இலங்கை
previous post