சென்னை: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கொண்டக்கரை ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் (38). கடந்த இரு தினங்களுக்கு முன்பு மனைவி, குழந்தைகள் கண்முன்னே மர்மகும்பல் வெட்டி கொலை செய்தது. ஆவடி சரக கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் உதவி ஆணையர்கள் முருகேசன், பரமானந்தன் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்தனர். பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு மனோகரனின் உடல் கொண்டக்கரை ஊராட்சியில் நேற்று பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தியதும் அசம்பாவித சம்பவங்கள் ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டது. அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு அதிமுக சார்பில் ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டாக இரங்கல் அறிக்கையும் வெளியிட்டிருந்தனர். கொலை சம்பவம் அரங்கேறிய இடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான எஸ்.எஸ்.எஸ்.சுந்தர் என்கிற சுந்தரராஜனை மீஞ்சூர் காவல் துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அனல் மின் நிலைய சாம்பல் கழிவுகளை ஏற்றிச் செல்ல ஒப்பந்தம் எடுத்த ஊராட்சி மன்ற தலைவர் மனோகரன், லாரி உரிமையாளரான சுந்தரபாண்டியனுக்கு லோடு வழங்காததால் ஏற்பட்ட முன்பகையே கொலைக்கு முக்கிய காரணம் என தெரியவந்தது. மேற்கொண்டு குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் திருப்பதியில் பதுங்கி இருந்த சுந்தர் (எ) சுந்தரபாண்டியன், நாகராஜ்( எ) பாம்பு நாகராஜ், ராஜ்குமார்(எ)பாட்டில் ராஜ், யுவராஜ்( எ) கில்லி யுவராஜ், ராஜேஷ், பாலா, மது, கோபாலகிருஷ்ணன், சூர்யா, டிரைவர்கள், பத்மநாபன், அரவிந்த்குமார் ஆகிய 11 பேரை கைது செய்தனர். மேலும் இந்த கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது….