பவானி, ஜூலை 2: அத்தாணி அருகே ஓடை புறம்போக்கு ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை, நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அந்தியூர் அருகே குப்பாண்டபாளையம் ஊராட்சி, கருவல்வாடிபுதூரை சேர்ந்த பொதுமக்கள் பவானி டிஎஸ்பி அலுவலகம் மற்றும் பவானி நீர்வளத்துறை செயற்பொறியாளர் அலுவலகத்தில் அத்தாணி பேரூராட்சி கவுன்சிலர் வேலு (எ) மருதமுத்து தலைமையில் அளித்த மனு விவரம் : அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், குப்பாண்டபாளையம் கிராமம், நஞ்சுண்டாபுரம், செங்காட்டுபுதூரில் குளம் உள்ளது.
இக்குளம் நிறைந்து உபரிநீர் வெளியேறும் நீர்வழிப்பாதையில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை தனியார் ஆக்கிரமித்து, சுற்றுச்சுவர் கட்டி வருகின்றனர். இதனால், உபரி நீர் வெளியேறும் காலங்களில் தண்ணீர் தேங்கி அருகாமையில் உள்ள ஒரு சமுதாயத்தினரின் மயானம் மூழ்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, தனியார் மேற்கொண்டு வரும் நீர் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அப்போது நிர்வாகிகள் வீரமூர்த்தி, தமிழரசன், குமார், வசந்தகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.