Saturday, July 6, 2024
Home » அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் 10 ஆண்டுகளாக நிரம்பாத கண்மாய்-ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வலியுறுத்தல்

அதிமுக ஆட்சியில் பராமரிக்காததால் 10 ஆண்டுகளாக நிரம்பாத கண்மாய்-ஆக்கிரமிப்பு அகற்றி சீரமைக்க வலியுறுத்தல்

by kannappan

மானாமதுரை :  தொடர்ந்து 10 ஆண்டுகளாக தண்ணீர் நிரம்பாத மானாமதுரை கண்மாயை சீரமைக்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மானாமதுரை புதுபஸ் ஸ்டாண்ட்டு செல்லும் வழியில் ரயில்கேட் மேற்கு பகுதியில் பொதுப்பணி துறைக்கு சொந்தமான 625 ஏக்கர் பரப்பளவு கொண்ட கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் 500 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மிளகனூர் ரோட்டை ஒட்டிய வடக்கு கண்மாய் பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவிற்கு சிலர் ஆக்கிரமிப்பு செய்து விளைநிலங்களாக மாற்றி அதில் தற்போது விவசாயம் செய்து வருகின்றனர். கீழமேல்குடி ரோடு தெற்கு பகுதியில் ஏராளமான விவசாயிகள் கண்மாயில் தண்ணீர் தேங்காமல் போனதால் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட வயல்வெளிகளை வீட்டு மனைகளாக மாற்றி விற்று விட்டனர். இந்நிலையில் வைகையில் தண்ணீர் வரும் போது மானாமதுரை கண்மாய்க்கு தண்ணீர் வரும் வகையில் கிருங்காகோட்டையில் உள்ள கால்வாய் முகத்துவாரம் தூர்ந்து போய் உள்ளதாலும், கால்வாய் தூர்வாரப்படாமல் உள்ளதாலும் கண்மாய்க்கு தண்ணீர் வராமல் உள்ளது. இதனால் கண்மாய் பகுதி முழுவதும் கருவேல மரங்கள் வளர்ந்து காணப்படுகின்றன. மேலும் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் தரிசாக கிடப்பதோடு மட்டுமில்லாமல் சுமார் 50க்கும் மேற்பட்ட பம்ப்செட்டுகளில் உள்ள கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதுகுறித்து விவசாயி தங்கராஜ் கூறுகையில், மானாமதுரை கண்மாயை நம்பி 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய அளவு மழை பெய்யாததாலும், வைகையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும் மானாமதுரை கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணித்துறையினர் சரியாக பராமரிக்காமல் விட்டனர். தொடர்ந்து 10 வருடங்களாக கண்மாயில் தண்ணீர் இல்லாததால் ஏராளமான விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலைக்குதள்ளப்பட்டனர். சிலர் 10 வருடங்களுக்கு முன்பு மோட்டார் பாசனத்தில் விவசாயம் செய்தனர். ஆனால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு சென்று கிணறுகளும் வற்றி விட்டதால் அவர்களும் மிகுந்த சிரமத்துள்ளாகி வருகின்றனர். மேலும் கண்மாயின் வடக்கு பக்கம் ஏராளமானோர் கண்மாயை ஆக்கிரமிப்பு செய்து விளைநிலங்களாக மாற்றி விட்டனர். ஆகவே பொதுப்பணித்துறையினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயில் தண்ணீர் தேங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.வீட்டுமனையாக மாறி வருகிறதுகீழமேல்குடியைச் சேர்ந்த விவசாயி ரவி கூறுகையில், கடந்த 10 வருடங்களாக மானாமதுரை கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாய்களை பொதுப்பணித் துறையினர் சீரமைக்காததால் வைகையில் தற்போது தண்ணீர் சென்றபோது கூட ஒரு சொட்டு தண்ணீர் கூட கண்மாய்க்கு வரவில்லை. இதனால் விவசாயம் செய்ய முடியமாமல் விவசாயிகள் விளைநிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி வருகின்றனர். மேலும் ஏராளமான வரத்து கால்வாய்களிலும், கண்மாயிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயில் தண்ணீர் தேங்கினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கிணற்று பாசனம் மூலம் கூட விவசாயிகள் விவசாயம் செய்யும் நடவடிக்கையில் துரிதமாக செயல்படுவார்கள் என்றார்….

You may also like

Leave a Comment

15 + sixteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi