சேத்தியாத்தோப்பு, ஜூலை 31: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராம பகுதியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்கத்துக்கு விவசாயிகள் கிராம மக்களின் எதிர்ப்பையும் மீறி புதிய பரவனாறு வாய்க்கால் அமைக்கும் பணியை என்எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதனை கண்டித்து விவசாயிகள், கிராம மக்கள் சார்பில் இன்று (31ம்தேதி) வளையமாதேவி கிராமத்தில் உண்ணாவிரதம் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.
இதையடுத்து, போராட்டத்துக்கு அனுமதி கேட்டு விவசாயிகளுடன் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி அலுவலகத்தில் டிஎஸ்பி ரூபன் குமாரை சந்தித்து உண்ணாவிரதத்துக்கு அனுமதி வழங்க வேண்டும் என மனு அளித்தார். அவர்களிடம் பேச்சு நடத்திய டிஎஸ்பி ரூபன்குமார் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தார். விவசாயிகள், கிராம மக்களிடம் ஆலோசனை செய்து பிறகு என்ன போராட்டம் நடத்துவது என்பது குறித்து அறிவிக்கப்படும் என அருண்மொழித்தேவன் எம்எல்ஏ கூறினார்.