Monday, July 1, 2024
Home » அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

அதிக புரதம்…அதிக நார்ச்சத்து…மொச்சையின் வியப்பூட்டும் நன்மைகள்…

by kannappan

நன்றி குங்குமம் டாக்டர் உடலை வலுவாக்கும் உணவுகளில் பயறு வகைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. பயறு வகைகளில் புரதச்சத்து மிகுதியாக இருப்பதால், இது அசைவ உணவுக்கு இணையாகக் கருதப்படுகிறது. அவற்றில் முக்கியமான ஒரு பயறு மொச்சை…மொச்சைக் கொட்டை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். இதனை லிமா பீன்ஸ், பட்டர் பீன்ஸ் என்று அழைப்பார்கள். வெண்ணெய்போல் வழவழப்பாக இருக்கும் அதன் தோற்றத்தால் பட்டர் பீன்ஸ் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாகப் பயறு வகைகள் உலர்ந்து விதைகளாக மாறுவதற்கு முந்தைய நிலையிலும் சாப்பிட ஏற்றவைதான். ஆனாலும், நன்றாக முதிர்ந்த பயறு வகைகளில்தான் குறைவான ஈரப்பதமும் அதிகச் சத்துக்களும் இருக்கும். கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்-பி, ரிபோஃபிளேவின் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலுக்கு நல்ல ஊட்டத்தைக் கொடுக்கிறது பயறு வகைகள். குழந்தைகள் முதல் டீன் ஏஜ் பெண்கள் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வயதானவர்கள் என அனைவருக்கும் பயறு வகைகள் அவசியம் தேவை. அதே சமயம் அதிகமாகச் சாப்பிடுவது நல்லது அல்ல. சைவ உணவு சாப்பிடுபவர்கள், தினமும் ஏதேனும் ஒரு வகை பயறை எடுத்துக் கொள்ளலாம்.; இதுபோல் பல நன்மைகளை உள்ளடக்கி இருக்கும் ஒரு பயறுதான் மொச்சை. பெரும்பாலானோர் மொச்சை சாப்பிடுவதால் வாயுத்தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இதன் காரணமாகவே அதன் பலனையும் இழந்துவிடுகின்றனர். அதற்குப் பதிலாக அதை வேக வைக்கும்போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாயுத்தொல்லை வராது. மொச்சைக் கொட்டையில் இரும்பு, கால்சியம் சத்துக்கள் அதிகளவில் உள்ளது. மொச்சையில் உள்ள லெவோடோபா(Levodopa) என்ற பொருள் பார்கின்ஸன் நோய்க்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் மன; அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு மண்டலத்துக்கு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. முக்கியமாக புரதச்சத்து அதிகம் கொண்டது. இது உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும். இதன் ஊட்டச்சத்து விவரங்களை விரிவாகப் பார்ப்போம்…மலச்சிக்கலைத் தடுக்க மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்பட்டு மலச்சிக்கலுக்கான வாய்ப்பைக் குறைக்கிறது. கரையாத நார்ச்சத்துக்கள் அதிகம்; இருப்பதால் எளிய முறையில் உணவு செரிமான மண்டலம் வழியாகச் செல்ல உதவுகிறது. சேதமடைந்த திசுக்களை சீர் செய்யுமளவுக்கு மொச்சைக் கொட்டையில் அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. உடலின் ஒவ்வொரு செயல்பாட்டையும் கட்டுப்படுத்த புரதம் மிகவும் அவசியம். புரதம் என்பது உடலில் உள்ள அணுக்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கும் சேதம் ஏற்பட்டால் பழுது பார்க்கவும் தேவையான ஒன்றாகும். உடலில் காயம் அல்லது ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதில் இருந்து விரைந்து மீண்டு வருவது உடலில் புரத அளவை மேம்படுத்துவதால் நலமடைவது சாத்தியமாகும். மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட் மற்றும் சஃபோனின் போன்றவை உள்ளன. இவை எல்லா ஊட்டச்சத்துக்களும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன. ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்க விடாமல் தவிர்க்க நார்ச்சத்து உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. புற்றுநோயைத் தடுக்க மொச்சைக் கொட்டையில் உள்ள நார்ச்சத்து குடலில் நச்சுப்பொருட்களின் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் பெருங்குடல் அழற்சியைத் தடுக்கிறது. பெருங்குடல் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்களைத் தடுக்கும் பணிகளிலும் மொச்சையில் உள்ள சத்துப் பொருட்கள் ஈடுபடுகிறது. மொச்சைக் கொட்டை ஒரு சிறிய அளவில் Genistein மற்றும் Teinstein என்னும்; ஐஸோஃப்ளவன்களைக் (Isoflavone) கொண்டுள்ளது. இந்த கூறுகள் மார்பகப் புற்றுநோயைத் தடுப்பதாக அறியப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவு உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால், உங்கள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உயர் நார்ச்சத்து கொண்ட மொச்சை கொட்டை நல்ல தீர்வு தருகிறது. உடலின் ஆற்றல் அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் தேவையான ஒரு முக்கிய கனிமம் இரும்புச்சத்து. ஆம்…. மொச்சைக் கொட்டை இரும்புச்சத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது.; உடலில் இரும்புச்சத்து குறைவதால், போதிய அளவு சிவப்பு ரத்த அணுக்கள் உற்பத்தியாகாமல், உடல் முழுவதும் பிராண வாயுவின் ஓட்டம் பாதிக்கப்படுகிறது.கர்ப்பிணிகளுக்கு ஃபோலேட் சத்து மிகவும் அவசியம். கர்ப்பம் தொடர்பான பிரச்னைக்கு காய்ந்த மொச்சையும், பச்சை மொச்சையும் ஃபோலேட் சத்தின் மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது. கர்ப்ப காலத்திற்கு முன்னும், கர்ப்ப காலத்திலும் ஃபோலேட் சத்து அதிகம் எடுத்துக்கொள்வதால் கருவில் இருக்கும் குழந்தையின் மூளையில் நரம்பு தொடர்பான பாதிப்புகள் மற்றும் முதுகுத்தண்டு பாதிப்பு போன்றவை ஏற்படாமலும் தடுக்கப்படுகிறது!தொகுப்பு: இதயா

You may also like

Leave a Comment

one × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi