அதிகாரியை மிரட்டிய அதிமுக நிர்வாகி உட்பட 2 பேர் கைது செய்யாறு அருகே `கையை வெட்டுவேன்’ என

செய்யாறு, ஜூலை 14: செய்யாறு அருகே அரசு அலுவலகத்தில் ஒட்டிய அதிமுக சுவரொட்டியை கிழித்து அகற்றியதால் கையை வெட்டுவேன் என அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பெரணமல்லூர் பேரூராட்சியில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஆகியன உள்ளது. இந்த அலுவலகங்களில் உள்ள சுவர்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளை அதிகாரிகள் முன்னிலையில் அலுவலக ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.

இதையறிந்த பெரணமல்லூர் அதிமுக நகர துணைச்செயலாளர் ஏ.கே.எஸ்.அறிவழகன், அவரது நண்பரும் ஒப்பந்ததாரருமான முருகன் ஆகிய இருவரும், கடந்த 7ம் தேதி வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜனை செல்போனில் தொடர்பு கொண்டு, `அதிமுக சுவரொட்டியை ஏன் அகற்றினீர்கள்? என கேட்டு ஆபாசமாக திட்டினார்களாம். மேலும், `அதே இடத்தில் மீண்டும் போஸ்டர் ஒட்டுவேன், மீறி கிழித்தால் கையை வெட்டுவேன்’ என மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதேபோல், சுவரொட்டி அகற்றியது தொடர்பாக பிடிஓ வெங்கடேனுக்கும், இவர்கள் இருவரும் போனில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, வேளாண் உதவி இயக்குனர் கோவிந்தராஜன், பிடிஓ வெங்கடேசன் ஆகியோர் தனித்தனியே பெரணமல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அதிமுக நகர துணைச்செயலாளர் அறிவழகன் உட்பட 2 பேரையும் தேடிவந்தனர். மேலும், செய்யாறு டிஎஸ்பி வி.வெங்கடேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அறிவழகன், முருகன் ஆகிய 2 பேரையும் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். பின்னர், அவர்களை செய்யாறு கோர்ட்டில் ஆஜர்படுத்தி நேற்று வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை