Tuesday, October 1, 2024
Home » அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக சென்னையில் பார்க்கிங் வசதியின்றி செயல்பட்ட 80 ஓட்டல்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக சென்னையில் பார்க்கிங் வசதியின்றி செயல்பட்ட 80 ஓட்டல்களுக்கு சீல்: மாநகராட்சி நடவடிக்கை

by Ranjith

 

சென்னை, பிப்.5: அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக, சென்னையில் பார்க்கிங் வசதியின்றி செயல்பட்ட 80 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான ஓட்டல்கள் இயங்கி வருகின்றன. ஆனால், பெரும்பாலான ஓட்டல்களில் பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இதனால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.

இப்பிரச்னைக்கு தீர்வாக, எந்தெந்த ஓட்டல்களில் வாகனங்களை நிறுத்த போதிய பார்க்கிங் வசதி இல்லையோ, அந்த ஓட்டல்களுக்கு எல்லாம் சீல் வைக்கும் பணிகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசாரிடம் என்ஓசி எனப்படும் தடையில்லாச் சான்றிதழ்கள் ஓட்டல்களிடம் இருக்கிறதா என்பதை வருவாய்த் துறை அதிகாரிகள் தற்போது சோதனை செய்து வருகின்றனர். பொதுவாக சென்னையில் பார்க்கிங் பிரச்னையை சரி செய்யவும், சாலைகளில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் ஓட்டல்களில் போதியளவில் பார்க்கிங் இடங்கள் உள்ளது என்பதை உறுதி செய்த பின்னரே தடையில்லா சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், அதிகாரிகள் நடத்திய ஆய்வில், சென்னையில் இப்போது வரை சுமார் 80 ஓட்டல்கள் போதிய பார்க்கிங் வசதியின்றி இயங்கி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2018க்குப் பிறகு தொடங்கப்பட்ட அனைத்து ஒட்டல்களும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க, போதியளவு பார்க்கிங் இடத்தை வைத்திருக்க வேண்டும் என்ற விதி இருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை நகரில் இருக்கும் 3,500 ஓட்டல்களில், பார்க்கிங் வசதியின்றி இயங்கும் 306 ஓட்டல்களை போக்குவரத்து போலீசார் கண்டறிந்துள்ளனர்.

அதில் பல ஓட்டல்கள் ஏற்கனவே மூடப்பட்டுவிட்டதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் நிரந்தமாக மூடிவிட்டார்களா அல்லது வேறு இடத்தில் ஓட்டல்கள் இயங்குகிறதா என்பது தொடர்பாக அடுத்தகட்ட விசாரணையை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இது மட்டுமின்றி வரும் ஏப்ரல் மாதம் முதல் உரிமம் இல்லாத வணிக நிறுவனங்களுக்குச் சீல் வைக்கும் மற்றொரு பெரிய நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

eight + 19 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi