ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் தொடர் மழையால் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாததால் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொடர் மழை பெய்து வருகின்றது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்து வந்த மழையானது நேற்று அதிகாலையில் வலுவடைந்து கனமழையாக கொட்டி தீர்த்தது. இதனால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளிப்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் வெளியிடாததால் மாணவர்கள் மழையில் நனைந்து கொண்டே செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொடிவேரி அணைக்கட்டு பகுதியில் 99 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. கோபி 73 மில்லிமீட்டர், சத்தி 50, பவானிசாகர் 31, கொடுமுடி 38, நம்பியூர் 40, எலந்தைகுட்டை மேடு 51.20, அம்மாபேட்டை 13.40, குண்டேரிப்பள்ளம் 16.20, வரட்டுப்பள்ளம் 8.80, மொடக்குறிச்சி 7, சென்னிமலை 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி இருந்தது. மாவட்டத்தின் சராசரி மழையளவு 25.91 மில்லிமீட்டர் ஆகும்….